அநீதியை மறக்காமல் இருக்க ஒரு தளம்
இணையதளம் என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டும் அல்ல: அதன் நோக்கம் பயன்பாடு சார்ந்தது மட்டும் அல்ல. விழிப்புணர்வை ஏற்படுத்த இணையதளம் அமைக்கலாம். அநீதியை தட்டி கேட்க இணையதளம் அமைக்கலாம். சமூக விழிப்புணர்வுக்காக இணையதளம் உருவாக்கலாம்.
அமெரிக்காவில், கருப்பின மக்களுக்கு எதிரான இனவெறிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இணையத்திலும் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. போராட்டத்தின் மைய கருத்தை, அதன் நியாயத்தை, அவசியத்தை வலியுறுத்தும் நோக்கிலான இணையதளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில், லெட்ஸ்நாட்பர்க்ட்.ஆர்க் (https://www.letsnotforget.org/ ) எனும் இணைதளம் அமைக்கப்பட்டுள்ளது. கருப்பர் சமத்துவத்திற்கான நீதி கேட்டு நடைபெற்று வரும் தற்போதைய போராட்டம் என்றென்றும் மறக்காமல் இருக்கப்படும் நோக்கத்தில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அவசியத்தை நாமே கூட பல முறை உணர்ந்திருக்கிறோம். பல பிரச்சனைகளில் நிதிக்கு குரல் கொடுத்து மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக அண்மைக்காலத்தில், இணையத்தின் ஆற்றலால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் பிரச்சனை என்னவெனில், ஒரு சில நாட்கள் தீவிரத்திற்கு பிறகு இந்த போராட்டங்கள் மங்கி விடுவதுண்டு. வேறு புதிய பிரச்சனை வரும் போது பழைய பிரச்சனைகளும், அவை தொடர்பான விவாதங்களும் மறக்கப்பட்டுவிடுகின்றன.
தற்போது அமெரிக்காவில், காவல்துறை வன்முறைக்கு பலியான ஜார்ஜ் பிளாய்ட்டின் சார்பாக நீதி கேட்டு நடைபெற்றும் வரும் எழுச்சி மிகு போராட்டத்தையும் நாளை மறந்து விடக்கூடாது எனும் நோக்கில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையை மறந்துவிட வேண்டாம், அநீதிக்கு எதிரான தற்போதையை போராட்டத்தையும் மறந்துவிட வேண்டாம், நாளை வந்ததும், நம்முடைய ஆவேசம் மற்றும் அதிருப்தியை மறந்துவிட வேண்டாம், நாம் மறந்துவிடும் கணத்தில் நாம் முன்னேற்றத்தை நிறுத்திவிடுகிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்’ என இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் இந்த நோக்கத்தை தெளிவாக உணர்த்துகின்றன.
கருப்பர் உயிர்கள் முக்கியம் (Black Lives Matter) என்பதையும் நாம் மறந்துவிட வேண்டாம்’ எனும் அறைகூவலுடன் முடிவுறும் இந்த வாசகங்கள் கீழ், போராட்டத்தை மறக்காமல் இருப்பதற்கான வழி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது மாதம் ஒரு இமெயில் மூலம், போராட்டத்தை மறக்காமல் இருப்பதற்கான நினைவூட்டல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் இமெயில் முகவரியை சமர்பித்தால், மாதம் ஒரு முறை சமத்துவத்திற்கான போராட்டத்தை நினைவூட்டும் தகவல் இமெயில் அனுப்பி வைக்கப்படும்.
ஜோனாதன் லோபஸ் என்பவர் இந்த தளத்தை அமைத்துள்ளார். நியூயார்க்ட்டைம்ஸ் நாளிதழ் முன் பக்கத்திலும், இன்ஸ்டாகிராம் படங்களிலிலும் கருப்பர் ஆதரவு போராட்டம் இடம்பெறுவது நின்றுவிட்டு பிறகு போராட்டம் என்ன ஆகும் எனும் கேள்விக்கு விடையாக இந்த தளத்தை அமைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தையும், அதன் பின்னணியில் உள்ள பிரச்சனைகளையும் மறக்காமல் இருக்க தொழில்நுட்பமே வழியென நினைத்து இந்த நினைவூட்டல் சேவை அமைத்திருப்பாதவும் தெரிவித்துள்ளார்.
இந்த தளம் பிரச்சனைக்கு முழு தீர்வாகிவிடாது என்றாலும் நல்லதொரு துவக்கமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இணைய முகவரி: https://www.letsnotforget.org/
நன்றி; பிராடக்ட் ஹண்ட் - https://www.producthunt.com/posts/let-s-not-forget