இணையதளங்களை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. அவற்றை பயன்பாட்டு நோக்கில் மட்டும் அணுகி மறந்துவிடக்கூடாது. பல இணையதளங்களின் பின்னே, அவை உருவான விதத்தை உணர்த்தும் கதைகள் இருக்கின்றன. அந்த கதைகள் பல விஷயங்களை புரிய வைக்க கூடியவை. அத்தகைய இணையதளங்கள் சிலவற்றை பார்க்கலாம்:
-
ஒரு புகைப்படத்தை தேடி…
ஸ்னைப்பர் அல்லே (http://sniperalley.photo/) இணையதளம், ஒரு புகைப்பட கேலரி போல இருக்கிறது. இதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் மாறுபட்ட உணர்வுகளை பிரதிபலிக்க கூடியவையாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றின் பின் சொல்ல முடியாத சோகமும், கடந்த காலத்தின் வலியும் நிரம்பியிருக்கின்றன.
இந்த தளத்தின் கதையை தெரிந்து கொண்டால், இந்த உணர்வுகளை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ளலாம்.
புகைப்படங்களால் ஆன இந்த தளம், ஒரு புகைப்படத்தை தேடி அமைக்கப்பட்டிருக்கிறது. இளைய சகோதரர் ஒருவர், மறைந்த தனது அண்ணனின் நினைவுகளின் நிழலோவியமாக மீட்டுத்தரக்கூடிய ஒரே ஒரு படத்தையேனும் தேடி கண்டுபிடித்து விடும் நோக்கத்துடன் இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.
தன்னைப்போலவே, இரத்த சொந்தங்களை இழந்து தவிக்கும் மற்றவர்களுக்கும் இந்த தேடல் பயன் அளிக்கலாம் என்பது அந்த சகோதரரின் நம்பிக்கை. அதோடு, இந்த தேடல் தங்கள் தேசத்தின் வரலாற்று வலிகளையும் பதிவு செய்வதாக அமையும் என்பது அவரது நம்பிக்கை.
அந்த சகோதரரின் பெயர் ஜெமில் ( Dzemil). ஐரோப்பியா நாடுகளில் ஒன்றான போஸ்னியாவைச்சேர்ந்தவர். 1990 களில் செர்பியாவுடனான போரில் சிக்கி சின்னபின்னமான அதே போஸ்னியா தான்.
போஸ்னியாவின் கதை துயரமானது. செர்பிய தாக்குதலில் அந்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர்.
போர் நடந்த கால கட்டத்தில், போஸ்னிய தலைநகர் சரஜோவாவில் (Sarajevo ) வசித்த மக்கள் நினைத்தாலே நடுங்கச்செய்யும் அபாயகரமான சூழலில் தள்ளப்பட்டனர். 1992 முதல் 1996 வரையான காலத்தில் அந்நகரம் மோசமான தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது ஆபத்து மறைந்திருந்து பலி வாங்கியது.
தலைநகர் சரஜோவாவை கைப்பற்ற முயன்ற செர்பிய படையினர், வலுவான எதிர்ப்பை சந்தித்ததால், அந்த பள்ளத்தாக்கு பகுதியை நோக்கி அடிக்கடி துப்பாக்கி தாக்குதலை நடத்த துவங்கினர். நீண்ட தொலைவு சுடக்கூடிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை கொண்டு, தொலைநோக்கி வழியே பார்த்து அப்பாவி மக்களை சுட்டனர்.
நான்கு ஆண்டு கால தாக்குத்தலில் பத்தாயிரம் பேருக்கு மேல் பலியானது ஒரு சோகம் எனில், எப்போது வெளியே வந்தாலும், எந்த நேரம் எந்த திசையில் இருந்து எதிரிகள் தோட்டா பாயுமோ என்ற அச்சத்திலேயே நகர மக்கள் வாழ வேண்டியிருந்தது அதைவிட சோகமானது.
இந்த தாக்குதலில் தான், ஜெமில் தனது மூத்த சகோதரரை இழந்தார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் திடிரென தோட்டா தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்ல அவகாசம் இல்லாமல் தன் அம்மாவின் மடியில் குருதி வழிய உயிரிழந்தார்.
சகோதரரை பறி கொடுத்த போது ஜெமிலும் 12 வயது. இந்த இழப்பும், போரின் பாதிப்பும் அப்பகுதியில் அமைதி திரும்பிய பிறகும் ஜெமிலை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது.
போர் ஏற்படுத்திய வடுவோடு, தனது சகோதரரின் இள வயது படம் ஒன்று கூட தன்னிடம் இல்லாதது அவரை மிகவும் வறுத்தியது. இறுதிச்சடங்கின் போது கூட படம் எடுக்கப்படவில்லை. சகோதரரின் நினைவுகளை பாதுகாக்கவும், யுத்த நாட்களின் வடுக்களை பதிவு செய்யவும் ஒரு புகைப்படம் இருக்காதா? என ஏங்கினார்.
போரின் போது, யாரேனும் ஒரு புகைப்பட கலைஞர் தனது சகோதரரை படம் எடுத்திருக்கலாம் அல்லவா? அந்த புகைப்பட கலைஞரை தேடி கண்டுபிடிக்க முடிந்தால் சகோதரரின் நிழலோவிய படத்தை வாங்கிவிடலாமே எனும் எதிர்பார்ப்பில், இந்த தேடலுக்காக ஸ்னைப்பர் அல்லே இணையதளத்தை அமைத்தார்.
வெறும் தனிப்பட்ட தேடுதலாக மட்டும் அல்லாமல், போர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை, புகைப்படங்களால் பதிவு செய்யும் வகையிலும் இந்த தளம் அமையும் என நினைத்தார். தன்னைப்போலவே, அன்பானவர்களின் படங்களை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இந்த தளம் மூலம் தேடல் நிறைவேறலாம் என்றும் நினைத்தார்.
மேலும், போரின் பாதிப்பை பதிவு செய்வதும் முக்கியம் என்று நம்பினார். பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் வாயிலாக போரின் பாதிப்பை பதிவு செய்ய வழி செய்தார். அதன் படி, போர் காலத்தில் போஸ்னியாவில் பணியாற்றிய புகைப்பட கலைஞர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் எடுத்த சரஜோவா தாக்குதல் படங்களை தளத்தில் இடம்பெறச்செய்து வருகிறார்.
இந்த படங்களில் ஒன்று தனது சகோதரரின் படமாக இருந்து விடாதா என்பது அவரது எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட மற்றவர்கள் தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்ளவும் இது உதவும் என நம்புகிறார். அதன் படியே போரால் பெரும் இழப்புகளை சந்தித்த சாமானிய மக்கள் தங்கள் துயர அனுபவங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
வரலாற்றை சாமானிய மக்கள் பார்வையில் இருந்து ஆவணப்படுத்தும் முயற்சியாகவும் இந்த தளம் அமைந்திருக்கிறது. இதில், ஜெமிலின் உருக்கமான கதையை தெரிந்து கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மற்றவர்களின் கதைகளையும், அவற்றுக்கு மவுன சாட்சியாக அமைந்த படங்களையும் பார்க்கலாம். மேலும் தங்கள் உயிரை பணயம் வைத்து போஸ்னிய போரை பதிவு செய்த புகைப்பட கலைஞர்களின் தீரமிகு செயலுக்கான அடையாளமாகவும் இந்த தளம் விளங்குகிறது.
இதில் பதிவாகியிருக்கும் போர் அனுபவங்கள் நெஞ்சை உலக்கி விடுகிறது. எப்போது வெளியே சென்றாலும் என் அப்பா, எங்களை தனக்கு பின்னால் நடந்து வருமாறு கூறுவார் என ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். மறைந்திருக்கும் எதிரி வீரரின் சுடும் தோட்டா தன்னை தாக்கி பிள்ளைகளை காக்கட்டும் என நினைத்த அந்த தந்தை உள்ளத்தின் படபடப்பு நமக்கு வரலாற்று சோகத்தை சொல்லாமல் சொல்கிறது.
போரின் பாதிப்பு தொடர்பான நினைவுகள் டிவிட்டரிலும் பகிரப்பட்டு வருகிறது: @SniperAlleyPhot
தொடர்ந்து பார்க்கலாம்…
-
நன்றி : அல்ஜெஸிரா செய்தி: https://www.aljazeera.com/indepth/features/camera-doesn-lie-documenting-besieged-sarajevo-200503133620219.html
-
சொல்லப்படாத கதைகளை சொல்லும் இணையதளம்!
நன்றி நண்பரே.
good