கொரோனா பூமி இணையதளம்
எப்போது தெரிந்து கொள்ள விரும்பினாலும், ’கோவிட் விஷுவலைசர்’ (https://covidvisualizer.com/) தளத்தை நாடலாம். இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் சுழன்று கொண்டிருக்கும் பூமி உருணையில், எந்த நாட்டின் மீது கிளிக் செய்தாலும், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை புள்ளிவிவரங்களாக தெரிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் குணமானவர்கள் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதோடு, இந்த எண்ணிக்கையை வரைபடமாகவும் பார்க்கலாம். உலக அளவில் ஒட்டுமொத்த எண்ணிக்கை விவரமும், பூமி உருண்டை கீழே இடம்பெறுகிறது.
அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த நவீட் மமூன் மற்றும் கேப்ரியல் ரஸ்கின் ஆகிய மாணவர்கள் இந்த தளத்தை உருவாக்கியுள்ளனர்.
வோர்ல்டோமீட்டர் (Worldometer's ) வழங்கும் கொரோனா பாதிப்பு புள்ளி விபரங்களை அடிப்படையாக கொண்டு இந்த தளம் செயல்படுகிறது.
இணையதள முகவரி: https://covidvisualizer.com/
இது ஆடியோ டிவிட்டர்
புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் வாய்ஸ்டு.காம் (https://vooiced.com/) சேவையை ஆடியோக்களுக்கான டிவிட்டர் என வர்ணிக்கலாம். டிவிட்டரில் எப்படி குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்கிறோமோ அதே போல இந்த தளத்தில், குரல் பதிவுகளை பகிர்ந்து கொள்ளலாம். அதாவது, மனதில் உள்ள கருத்துக்களை பேசி, ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ளலாம். இரண்டு நிமிடம் பேசலாம்.
இப்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பேச்சுகளை கேட்டுப்பார்த்தும் கருத்து சொல்லலாம். டிவிட்டர் போலவே, வரிசையாக டைம்லைனில் குரல் பதிவுகள் தோன்றுகின்றன. இப்போதைக்கு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் பதிவுகள் உள்ளன.
புதியவர்கள் பதிவிடுவதற்காக, முகப்பு பக்கத்தில் ஒரு கேள்வியும் கேட்கப்படுகிறது. இதை தூண்டுகோளாக வைத்துக்கொண்டு பதில் சொல்லலாம்,.
சுவாரஸ்யமான சேவை! பிரபலமாகிறதா என பார்க்கலாம்.
கொரோனா கால கதை எழுதுங்கள்
கொரோனா பாதிப்பு போன்ற ஒரு பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், வாரக்கணக்கில் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டியிருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாமும் வீட்டுக்குள்ளேயே கட்டுப்பட்டிருக்கிறோம். இதனால் உண்டாகும் மன உளைச்சலுக்கும், நெருக்கடிக்கும் நடுவே கலையை தவிர வேறு ஆறுதல் உண்டோ என்று கேட்கிறது போர்ஜ்பிக்ஷன் (https://forgefiction.com/) இணையதளம்.
கலை என இங்கு குறிப்பிடப்படுவது கதை எழுதுவதை. நீங்கள் தான் இதை எழுத வேண்டும் என இந்த தளம் ஊக்குவிக்கிறது. ஆம், உங்கள் கொரோனா கால அனுபவத்தை கதையாக எழுதி சமர்பிக்கலாம். கற்பனையாக கூட இருக்கலாம்.
கொரோனா சவாலை உலகம் எப்படி எதிர்கொண்டது என்பதற்கான ஆவணமாக இந்த தளம் வருங்கால சந்ததிக்கு விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 வரை கதைகளை சமர்பிக்கலாம். சிறந்த கதைகள் தேர்வு செய்யப்பட்டு புத்தகமாகவும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
#QuarantineFiction எனும் ஹேஷ்டேகுடன் உங்கள் நண்பர்களையும் கதை எழுத அழைக்கலாம்.
நீங்களும் முயன்று பார்க்கலாம்!