’ஏதாவது செய்’ இணையதளம்
’ஏதாவது செய்’ எனும் தலைப்பில் கவிஞர் ஆத்மாநாம் மிகத்தீவிரமான ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் இதே போல பொருள்படும் வகையில் டூசம்திங்.ஆர்க் (https://www.dosomething.org/ ) எனும் இணையதளம் இருக்கிறது. இளைஞர்களுக்கான உலகலாவிய இயக்கமாக செயல்பட்டு வரும் டூசம்திங் அமைப்பால் நடத்தப்படும் இந்த தளம், இளைஞர்கள் சமூகத்தில் நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்த தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வதில் ஊக்கம் அளிப்பது துவங்கி கால நிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை பல்வேறு முக்கிய விஷயங்களுக்காக இளைஞர்கள் மாற்றத்திற்காக செயல்படும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு பிரச்சனை தொடர்பாகவும், ஏதேனும் சின்ன நடவடிக்கையை மேற்கொள்ளத்தூண்டும் வகையில் இதன் விழிப்புணர்வு திட்டங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக, பாகுபாடுக்கு எதிரான செயல்பாடாக, குடிபெயர்ந்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவான கருத்துக்களை கூறுமாறு இளைஞர்களை ஊக்குவிக்கிறது.
மனநலம் சார்ந்த பிரச்சனையில், நண்பர்கள் தங்கள் உடல் குறித்து கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மை போக்கும் வகையில் அவர்கள் அறையில் நேர்நிறை வாசகத்தை எழுதி வைக்க தூண்டுகிறது. புதிய நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் செயல்கள், பாலின சமத்துவத்திற்காக குரல் கொடுப்பது என, இன்னும் பலவிதமாக இந்த தளத்தின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அமைந்துள்ளன. யூடியூப் வீடியோக்களை காது கேளாதவர்களும் பயன்பெறும் வகையில், அவற்றுக்கு பொருத்தமான வாசகங்களை சேர்க்க வலியுறுத்தும் வகையிலும் ஒரு பிரச்சாரம் அமைந்துள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்டிருந்தாலும் 130 க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த இளைஞர்கள் இந்த தளத்தில் உறுப்பினர்களாக இணைந்து தங்கள் பகுதிகளில் மாற்றத்திற்கான செயலியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தளத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் சமூக செயல்பாட்டிற்கான ஊக்கம் பெறுவதோடு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பரிசுகளையும் பெறலாம்.
· ஏதாவது செய், ஏதாவது செய்…எனும் ஆத்மாநாம் கவிதையை இணையத்தில் வாசிக்க…
· பி.கு; அந்த கவிதைக்கான பின்னூட்டங்களை வாசிக்காமல் இருப்பது நலம்.