உங்கள் எதிர்கால சுயத்திற்கு ஒரு இமெயில் !
இதுவரை பத்து மில்லியன் இமெயிலை அனுப்பி வைத்திருப்பதாக பெருமைபட்டுக்கொள்கிறது அந்த புதுமையான இமெயில் சேவை. இணைய பரப்பில் நாள்தோறும் பகிரப்படும் இமெயில்களின் எண்ணிக்கை 300 பில்லியனுக்கு மேல் என சொல்லப்படும் போது, இந்த எண்ணிக்கை அற்ப சொறம் தான் என்றாலும், பியூச்சர்மீ (https://www.futureme.org/) இமெயில் சேவையை நாம் கொண்டாடவே செய்யலாம்.
பியூச்சர்மீ இமெயில் சேவையில் என்ன சிறப்பு என்றால், இது உங்களுக்கு நீங்களே இமெயில் அனுப்பிக்கொள்ள வழி செய்கிறது. ஜிமெயிலில் கூட இந்த வசதி இருக்கிறதே என கேட்க வேண்டாம். பியூச்சர் மீ, இமெயில் அனுப்ப வழி செய்வது உங்கள் எதிர்கால உங்களுக்கு!.
ஆம், இந்த இமெயில் சேவையில், உங்களுக்கு நீங்களே ஒரு மெயில் எழுதி, அதை எதிர்காலத்தில் குறிப்பிட்ட நாளில் உங்களுக்கு அனுப்பி வைக்கச்செய்யலாம். உதாரணத்திற்கு, அடுத்த ஐந்தாண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என எழுதி வைத்து, அதை சரியாக ஐந்தாண்டுகள் கழித்து உங்கள் இமெயில் முகவரிக்கு வருமாறு செய்யலாம்.
ஐந்தாண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட தினத்தில், உங்கள் மெயிலை நீங்கள் படித்துப்பார்த்தால் எப்படி இருக்கும்? பழைய நினைவுகளை கிளறி விடுவதில் துவங்கி, நினைத்ததை செய்திருக்கிறோமா? என ஆய்வு செய்வது வரை பலவிதமான உணர்வுகளை இது ஏற்படுத்தலாம்.
இப்படி உங்களுக்கு நீங்களே தொடர்பு கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது தான் பியூச்சர்மீ. மெயில் சேவை.
2002 ல் இந்த மெயில் சேவை அறிமுகமானது. இதன் புதுமையான தன்மை உண்டாக்கிய ஆரம்ப கால பரபரப்பு அடங்கிவிட்டாலும், தொடர்ந்து இந்த சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட கடிதங்கள் இந்த தளம் வாயிலாக அனுப்ப பட்டுள்ளன.
ஒரு உளவியல் பரிசோதனையாக அல்லது சமூகவியல் ஆய்வாக இந்த சேவையை எடுத்துக்கொள்ளலாம். நமக்கு நாமே செய்து கொள்ளும் சுய அலசல் அல்லது ஆய்வாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
காலமும், நாமும் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். இதோ இந்த நிமிடத்தில் நமக்கு பலவிதமான திட்டங்கள் இருக்கின்றன. அச்சங்களும், கவலைகளும் இருக்கின்றன. கனவுகளும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் குறித்து வைப்பது போல எழுதி, எதிர்காலத்தில் நமக்கே மெயிலாக வந்து சேர வைக்கலாம்.
இதற்காக, பியூச்சர்மீ தளத்தில் உள்ள மெயில் பெட்டியில், எனதருமை எதிர்கால எனக்கு என துவங்கி, உங்கள் எண்ணங்களை எழுதி அனுப்பி வைக்கலாம். அந்த மெயில் உங்களுக்கு எப்போது வந்துசேர வேண்டும் என குறிப்பிடலாம்.
இப்படி அனுப்பி வைக்கும் மெயிலை, பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட பார்வைக்கு மட்டும் வைத்துக்கொள்ளலாம். பொதுவெளியில் பகிரும் போது பெயர் குறிப்பிடாமலும் பகிரலாம்.
ஆக, இந்த தளத்தில் பகிரப்பட்டுள்ள பொது மெயில்களை படித்துப்பார்த்தால் மற்றவர்கள் மன ஓட்டத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
பொதுவான சேவை தவிர, ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான பிரத்யேக சேவைகளும் தனியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முன் எப்போதையும், விட கொரோனா காலத்தில், இந்த சேவையின் முக்கியத்துவத்தை தெளிவாக உணரலாம். எல்லோருக்கும் சவாலாக இருக்கும் கொரோனா சூழலில் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அல்லது கொரோனா காலத்தை எதிர்கொள்ளும் விதத்தை மெயிலாக அனுப்பி வைத்துக்கொண்டால், கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு சில அண்டுகள் கழித்து அந்த மெயிலை படித்துப்பார்ப்பது மிகப்பெரிய கண் திறப்பாக அமையலாம்.
-