இந்திய புரோகிராமர்களை அறிவதற்கான தளம்!
புரோகிராமிங் உலகில் இந்தியர்கள் புலிகளாகவும், வேங்கைகளாகவும் இருப்பது தெரிந்த சேதி தான். அது மட்டும் அல்ல, கொடுத்த வேலையை, கொஞ்சம் படைப்புத்திறனோடு ஊக்கமாக செய்யும் கடின உழைப்பாளிகளாகவும் இந்திய நிரலர்கள் இருக்கின்றனர். அதாவது கோடிங் செய்பவர்கள்.
ஆக, நம் நிரலர்களை அடையாளம் காட்டுவதற்காக என்று ஒரு இணையதளம் இருப்பது அவசியம் தானே. ’நிரல் எழுதும் இந்தியர்கள்’ என பொருள்படும் (https://indianswhocode.com/ ) எனும் இணையதளம் இந்த நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ளது.
இந்திய நிரலர்களுக்கான கையேடு என சொல்லக்கூடிய இந்த தளம், இத்துறையில் செயல்பட்டு வரும் இந்தியர்களை பட்டியலிடுகிறது.
காட்சிரீதியாக ஈர்க்கும் வகையில், நிரலர்களை அவர்களின் புகைப்படங்களோடு வரிசையாக பட்டியலிடும் வகையில் இந்த தளத்தின் வடிவமைப்பு அமைந்துள்ளது. நிரலர்கள் யார்? என்ன செய்கின்றனர்? போன்ற தகவல்களை கொண்ட சிறு அறிமுகம் ஒவ்வொரு நிரலர்கள் படத்துடனும் இடம் பெற்றுள்ளது. அதனுடன், அவர்களின் சமூக ஊடக முகவரிகள் மற்றும் நிரல் கூடுதல் தளங்களின் இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
பணி நிமித்தமாக நிரலர்கள் தேடுபவர்கள் அல்லது நட்பு தேடும் நிரலர்களுக்கு நிச்சயம் இந்த தளம் உதவியாக இருக்கும். இப்போதைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நிரலர்களே இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளனர்.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பெரும்பாலான இந்திய நிரல்ர்கள் பற்றிய தகவல்களை கொண்டதாக இந்த தளம் உருவானால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்தாலே இனிக்கிறது. அவ்வண்ணம் இந்த தளம் வளரட்டும் சாகில் ரான்புரி மற்றும் ஜைட் குரேஷியை வாழ்த்துவோம. இந்த இரு இளைஞர்களும் தான் இந்த தளத்தை உருவாக்கியுள்ளனர். https://twitter.com/indianswhocode