புதுமையான புத்தக பரிமாற்ற இணையதளம்
இணையதளங்களை, செயலிலகளை அறிமுகம் செய்து கொள்ளும் போது, இதனால் நமக்கு என்ன பயன் என்று கேட்கத்தோன்றும். பயன்பாடு அம்சம் முக்கியமானது என்றாலும், ஒரு சில இணையதளங்களை அதன் புதுமையான கருத்தாக்கத்திற்காகவே அறிமுகம் செய்து கொள்ளலாம். அந்த வகையில் அமைகிறது இன்றையை செயலி ’புக்போ.ஸ்ட்’.
பழமையையும் புதுமையையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த செயலி, புத்தகங்களை அஞ்சலில் பரிமாறிக்கொள்ள வழி செய்கிறது. இதன் மூலம் வாசிப்பு சார்ந்த நட்பை வளர்த்துக்கொள்ளவும், புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளவும் உதவுகிறது.
இப்போதெல்லாம் புத்தகங்களை யார் படிக்கின்றனர் எனும் கவலை அல்லது கேலி கலந்த குரல்களுக்கு மத்தியில், புத்தகங்களை நேசிப்பவர்கள், அவற்றை பரிமாறிக்கொண்டு, வாசிப்பை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
புக்போ.ஸ்ட் (https://bookpo.st/ ) செயலியின் கருத்தாக்கம் எளிமையானது. ஒருவர் தன்னிடம் உள்ள புத்தகங்களை அதில் ஆர்வம் உள்ள இன்னொருவருக்கு அஞ்சலில் அனுப்பி வைத்து, பதிலுக்கு அவரிடம் இருந்து தனக்கு ஆர்வம் உள்ள புத்தகத்தை பெற்றுக்கொள்ளலாம். இப்படி புத்தகங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இந்த நூல் பின்னணில் உள்ள அனைவரும் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலி செயல்படும் விதமும் எளிமையாகவே இருக்கிறது. இதில் உறுப்பினராகும் போது, உங்களிடம் உள்ள ஐந்து புத்தகங்கள் பற்றிய தகவல்களை பட்டியலிட வேண்டும். இந்த தகவலின் அடிப்படையில் இதே பட்டியலை கொண்டுள்ள சக உறுப்பினர் உங்களுக்கு அறிமுகம் செய்யப்படுவார்.
இருவரும் வாசிக்கும் புத்தகங்கள் ஒன்றாக இருப்பதால், அவர்களின் வாசிப்பு ஆர்வமும் ஒன்றாக இருக்கும் என கருதலாம். எனவே, அவரிடம் உள்ள மற்ற புத்தகங்களில் ஒன்றை நீங்கள் அஞ்சலில் அனுப்பக்கோரலாம். அதே போல அவர் கேட்கும் ஒரு புத்தகத்தை பதிலுக்கு அனுப்பி வைக்கலாம். அஞ்சம் செலவு உறுப்பினர்களுடையது. இதற்கான இணைப்பு பாலமாக செயலி இயங்குகிறது.
இந்த பரிமாற்றத்தை கொண்டு, வாசிப்பு சார்ந்த நட்பை வளர்த்துக்கொள்ளலாம். உள்ளூரில் உள்ளவர்களுடன் இணைந்து புத்தக குழுக்களையும் உருவாக்கி கொள்ளலாம். இன்னும் நிறைய விஷயங்களை செய்யலாம். அதற்கான கூடுதல் அம்சங்களை உருவாக்கியிருப்பதாக செயலி தெரிவிக்கிறது.
ஆக, அஞ்சல் வழி புத்தக பரிமாற்றம் மூலம் நட்பையும் வாசிப்பையும் வளர்த்துக்கொள்ள வழி செய்கிறது இந்த செயலி.
அஞ்சல் வழி சேவை என்பதால் கட்டணம் சார்ந்தது, மேலும் இதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் அமெரிக்காவை சார்ந்தவர்களாக இருக்கலாம். எனவே, நமக்கு என்ன பயன் என நினைக்கலாம். இணைய யுகத்தில், அஞ்சல் வழியே புத்தகங்களை பரிமாறிக்கொள்ள வழி செய்யும் செயலி எனும் கருத்தாக்கம் ஈர்ப்புடையது தானே.
அச்சு புத்தகத்திற்கு பதில், மின்னூல் ( இ-புக்) பரிமாறிக்கொள்ள வழி செய்திருக்கலாமே என்றும் சிலர் கேட்கலாம். ஆனால், அச்சு புத்தகத்தை வாசிக்கும் அனுபவமே தனி என்பதால் இந்த கருத்தாக்கத்தை வரவேற்கலாம்.
இந்த கருத்தை ஆமோதிப்பவர்கள் புக்கிராஸிங் தளம் பற்றிய அறிமுகத்திற்கு காத்திருக்கவும். மின்னூலே சிறந்தது என வாதிடுபவர்களும் தான்.
-