மறைந்திருந்து எழுதும் மர்மம் என்ன?
கவனச்சிதறல் இல்லாமல் எழுதுவதற்காக என்றே பிரத்யேகமான ஆன்லைன் சேவைகள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் இப்போது, ’ரைட் இன்விசிபில்’ (https://www.writeinvisible.com/ ) எனும் புதிய சேவை அறிமுகம் ஆகியுள்ளது.
எழுத்தாளர்களும், எழுத விரும்புகிறவர்களும், இந்த புதிய எழுதி சேவையை நிச்சயம் விரும்புவார்கள். ஏனெனில் இந்த தளம், எழுதும் போது எதிர்கொள்ளக்கூடிய முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, எழுத ஆரம்பித்தால் இடையே நிறுத்தாமல் தங்கு தடையின்றி எழுதுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது.
கம்ப்யூட்டரில் எழுத ஒருவர் எந்த வகையான எழுதி மென்பொருளை பயன்படுத்தினாலும் சரி, கவனச்சிதறல் ஒரு பிரச்சனையாகலாம். எழுதிக்கொண்டிருக்கும் போதே, இணையத்தில் உலாவுவது அல்லது எழுதியதை அடித்து திருத்திக்கொண்டே இருப்பது போன்ற பல தடைகள் எழுதுவதற்கு குறுக்கே வரலாம். இன்னும் சிலர், எழுத நினைத்ததை வார்த்தைகளில் ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறலாம்.
இந்த பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ளும் வகையில், எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்த உதவும் பிரத்யேக ஆன்லைன் சேவைகளும் பல இருக்கின்றன. கவனச்சிதறலை வெற்றி கொள்வதற்கு உதவக்கூடிய விதவிதமான அம்சங்களை இந்த சேவைகள் கொண்டிருக்கின்றன.
இந்த பட்டியலில் இணைந்துள்ள ரைட் இன்விஸிபில் தளம், மிகவும் வித்தியாசமான வழியில் கவனச்சிதறலை எதிர்கொள்ள உதவுகிறது. மறைந்திருக்க எழுத வைக்கிறது. அதாவது, எழுதுவதை பார்க்காமலே எழுத வழி செய்கிறது.
கதையோ, கட்டுரையோ, வலைப்பதிவோ எழுதும் போது, புறவழி கவனச்சிதறல்கள் போதாது என்று, எழுதுபவர்களுக்குள் இருந்தே ஒரு தடை வரலாம் அல்லவா? எழுதியது சரியாக வரவில்லை எனும் உணர்வில் டெலிட் செய்து மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருக்கும் வழக்கம் தான் இந்த உள்ளுக்குள் இருக்கும் எழுத்து வில்லன். இதற்கு தீர்வாக தான், ரைட் இன்விசிபில் தளம், எழுதுவதை பார்காமலே டைப் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் எழுதும் போது, மற்ற எழுதிகள் போல திரையில் நாம் எழுதுவது தோன்றாது. அந்த பக்கம் எப்போதும் போல வெறுமையாகவே இருக்கும். எனவே, நாம், அடித்தல் திருத்தல் பற்றி எல்லாம் கவலைப்படாமல், எழுதிக்கொண்டே போகலாம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி, எழுத நினைத்ததை எழுதி முடித்துவிடலாம்.
திரையில் எழுத்துகள் தோன்றாவிட்டாலும், இந்த தளம் நாம் எழுதுவதை தனியே சேமித்து வைப்பதோடு, அதன் நகலை அனுப்பியும் வைக்கிறது.
தென்னாப்பிரிக்காவைச்சேர்ந்த இப்ராகிம் ஹாசன் (Ebrahim-Khalil Hassen ) என்பவர் ஆய்வுக்கட்டுரை எழுதுவதில் தனக்கிருந்த சிக்கலுக்கு தீர்வாக தனக்காக இந்த புதுமையான எழுதி சேவையை உருவாக்கி கொண்டதாகவும், தன்னைப்போலவே மற்றவர்களுக்கும் பயன்படும் என்று இந்த இணையதளத்தை அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புதுமையான எழுத்து அனுபவத்திற்கு பயன்படுத்திப்பாருங்கள்.