வேலுநாய்க்கரைப்பார்த்து நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என கேட்கப்படும் நாயகன் பட வசனம் போல, தொழில்நுட்ப உலகில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு நல்லதா? கெட்டதா எனும் கேள்வி பலருக்கு இருக்கலாம்.
ஏ.ஐ., நல்ல விதமாகவும் பயன்படலாம், தீய விதமாகவும் பயன்படலாம். அந்த தொழில்நுட்பம் கையாளப்படும் நோக்கத்தில் தான் அதன் பயன்பாடு இருக்கிறது. உதாரணமாக, முகமறிதல் நுட்பம் பிரச்சனைக்குறியதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏ.ஐ., -ன் அங்கமான இயந்திர கற்றல், ஆழ் கற்றல் போன்ற நுட்பங்கள், பேச்சறிதல் உள்ளிட்ட பலவற்றை சாத்தியமாக்கியுள்ளன.
இணைய தேடலில் நாம் எதிர்கொள்ளும் ஆட்டோகம்ப்ளிட் வசதி, இயந்திர மொழிபெயர்ப்பு சேவை போன்றவை ஏ.ஐ., பலன் தான். மருத்துவ துறையில், மனித கண்களுக்கு தப்பிவிடும் நோய் அறிகுறிகளை கூட ஏ.ஐ., வெகு சிரத்தையாக கண்டறிந்து விடுவதாக சொல்லப்படுகிறது.
இன்னும் எண்ணற்ற விதங்களில் ஏ..ஐ., பயன்பாடு அமைகிறது. இதில் சர்ச்சைகளும் உண்டு. ஆனால், ஏ.ஐ., மனித குலத்தை விழுங்கிவிடும், எங்கும் எந்திரன் ரோபோ வந்துவிடும் போன்றவை எல்லாம் தொழில்நுட்ப மிரட்டல்களே தவிர வேறு ஒன்றுமில்லை.
நிச்சயம் ஏ.ஐ அத்தனை பயங்கரமானது இல்லை. ஏனெனில் அந்த அளவு ஆற்றல் மிக்க ஏ.ஐ., இன்னமும் மனித குலத்திற்கு சாத்தியமாகவில்லை. இப்போது ஏ.ஐ., துறையில் பேசப்படுவது எல்லாம், சொற்ப சாத்தியங்களை கொண்ட குறிப்பிட்ட நோக்கில் பயன்படும் நேரோ ஏ.ஐ தான்.
ஆனால். ஏ.ஐ., உலகில் நிகழும் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கவனித்தாக வேண்டும். ஏ.ஐ., பிரச்சனைக்குறிய வகையிலும் பயன்படுத்தப்பட்டு வருவதால், இது குறித்த தகவல்களை அறிவது முக்கியம்.
இப்படி ஏ.ஐ., எங்கெல்லாம், எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால், இந்த ஏ.ஐ., வரைபடத்தை ( https://map.ai-global.org/?) நாடலாம்.
இந்த வரைபடத்தில், உலகில் தற்போது அமலில் இருக்கும் ஏ.ஐ., திட்டங்கள் பற்றிய விவரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. உலக நாடுகள் மற்றும் நகரங்கள் தொடர்பான விவரங்கள் போல, இந்த வரைபடம், ஏ.ஐ., திட்டம் தொடர்பான தகவல்களை அளிக்கிறது.
இதில் சுட்டிக்காட்டப்படும் இடங்களை கிளிக் செய்தால் அங்கு செயல்படுத்தப்படும் ஏ.ஐ., திட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக அந்த திட்டம் நல்லவிதமானதா, தீய விதமானதா என்பதை அறியலாம்.
இந்த வரைபடம் படி பார்த்தால், இலங்கையில் செயல்படுத்தப்பட்ட ஏ.ஐ., குண்டுவெடிப்பு குற்றவாளியை தவறாக அடையாளம் காட்டியிருக்கிறது. தமிழகத்தில் பிளாக்செயின் அடிப்படையிலான திட்டம் நல்லவிதமான திட்டம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்த ஒரு புதிய விஷயம் , திட்டங்கள் எதுவும் அப்பழுக்கற்ற விசயமாக , மனித குலத்தில் துவங்கி வைக்க இயலாது . காலப்போக்கில் , பிழைகளை அறிந்து , பின்னூட்டம் பெற்று , அப்பழுக்கற்ற திட்டநிரல் நோக்கிய பயணத்தை தொடர இயலும். ஒரு பெரிய மாநில பிரதேச அளவில் திட்டங்களை அமல் படுத்தாமல் , சிறிய யூனியன் பிரதேசங்கள் அளவில் அமல்படுத்தி , அனுகூலம் ,மற்றும் பிரதி கூலங்கள் பார்த்து , அனுகூலம் அதிகம் இருந்தால் மட்டும் , மாநிலங்கள் அளவில் அமல்படுத்தலாம். - என் அபிப்ராயம் .