லாக்டவுன் கால லட்சியங்கள்
கொரோனா கால லாக்டவுன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது. இந்த காலம் எல்லோரையும் யோசிக்க வைத்து, வாழ்க்கையை அணுகும் விதத்தையும் மாற்றியிருக்கிறது. லாக்டவுனுக்கு முன், நம்மில் பலருக்கும் பலவித திட்டங்களும், விருப்பங்களும் இருந்திருக்கலாம். ஆனால், லாக்டவுனுக்கு பின் நாம் செய்ய நினைப்பவை அல்லது விரும்புபவை நிச்சயம் மாறியிருப்பதாக சொல்லலாம்.
உலகம் முழுவதும் உள்ளவர்கள், இப்படி லாக்டவுக்கு பிறகு செய்ய உத்தேசித்திருக்கும் திட்டங்களையும், யோசனைகளையும் பட்டியல் போடுவதற்கு என்றே ஆப்டர்லாக்டவுன்.மீ (https://afterlockdown.me/ ) எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
லாக்டவுனுக்கு பிறகான திட்டங்கள் குறித்து பலரும், டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் திரட்டு இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
லாக்டவுனுக்கு பிறகுநான் மலையேற்றம் செய்ய விரும்புகிறேன், மீண்டும் உலகை வலம் வருவதை துவக்க விரும்புகிறேன், புதிய நிறுவனம் துவங்க விரும்புகிறேன், புதிய வேலையில் சேர விரும்புகிறேன்… என்பது போல பலரும் பகிர்ந்திருக்கும் யோசனைகளை இந்த தளத்தில் படிக்கலாம்.
இந்த தளத்தின் பதிவுகளை அதன் டிவிட்டர் பக்கத்திலும் பின் தொடரலாம்: https://twitter.com/after_lockdown
இவற்றில் சில உன்னதமானவை, சில சாதாரணமானவை. ஆனால், லாக்டவுனில் மனது செயல்படும் விதத்தை உணர்த்துபவை. அதோடு, லாக்டவுனுக்கு பிறகான காலம் பற்றி நம்பிக்கை கீற்றை அளிப்பவை.
லாக்டவுன் கால உத்வேகத்திற்கு இவற்றை படித்து பார்த்து, சக மனிதர்கள் உள்ளத்து சிந்தனைகளை இந்த தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். விரும்பினால், நீங்களும் லாக்டவுனுக்கு பிறகு என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
லாக்டவுனுக்கு பிறகு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் நண்பர்களே?
--
இதே கேள்விக்கு பதில் அளிக்கத்தூண்டும் வகையிலான இன்னொரு சுவாரஸ்யமான இணையதளமும் உள்ளது:
கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்’ (https://whencoronaends.com/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் , கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்பது தான்.
புத்தாண்டு உறுதி மொழி போல, இதை கொரோனா கால உறுதிமொழியாக கொள்ளலாம்.
நாம் எல்லோருமே வாழ்க்கையில் பல உறுதிமொழிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் பிஸியாகி விடுகிறோம். இது பலருக்கும் உள்ள பழக்கம் தான். எனினும் கொரோனா பாதிப்பு வாழ்வின் புதிய நிதர்சனத்தை உணர்த்தியுள்ள நிலையில், நாம் செய்ய நினைத்ததை எல்லாம் தள்ளிப்போடாமல் செய்து முடித்தால் என்ன என்று புரிய வைத்திருக்கிறது அல்லவா?
ஆகவே, நீங்கள் செய்ய நினைத்து செய்யாமல் இருக்கும் விஷயங்களை செய்து முடிக்க உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் என ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தும் வகையில், கொரோனா முடிந்த பிறகு செய்ய நினைக்கும் ஐந்து விஷயங்களை பட்டியலிட்டு, அதை #whencoronaends எனும் ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொள்ளுமாறு இந்த தளம் வேண்டுகோள் வைக்கிறது.
கொரோனா ஒவ்வொருவருக்கும் பல பாடங்களை கற்று கொடுத்திருக்கிறது. நீங்கள் செய்ய நினைத்ததை செய்யுங்கள் என்பது தான் அதில் மிகப்பெரிய பாடம்.
கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்ய நினைக்கும் ஐந்து விஷயங்கள் என்ன?
இணையதள முகவரி: https://whencoronaends.com/
-
இதே போல, டிக்செல்.காம் உருவாக்கியுள்ள இணையதளம், லாக்டவுன் காலத்தில் நீங்கள் கேட்டு ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது: https://spotify.tixel.com/
இசை கேட்பு சேவையான ஸ்பாட்டிபை மற்றும் ஆப்பிள் இசை மூலம் கேட்ட பாடல்களை இதில் பகிரலாம். இதன் மூலம் சம்பந்தப்பட்ட இசை கலைஞர்களுக்கும் உதவலாம் என்பது இந்த தளத்தின் எண்ணம்.