எழுதுவதற்கு ஒரு தளம் இருந்தால்…
தமிழில் வலைப்பதிவு அலை அடித்து ஓய்ந்துவிட்டதாகவே தெரிகிறது. ஆர்வத்தோடு வலைப்பதிவு செய்து கொண்டிருந்தவர்களில் பலர், இனி சொல்வதற்கு ஒன்றுமிலை என்பது போல வெளியேறிவிட்டனர். இன்னும் பலர் பேஸ்புக்கில் ஐக்கியமாகிவிட்டனர்.
எனவே, வலைப்பதிவு உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்வதில் நம்மவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்காது என்றே தோன்றுகிறது. நிலைமை இப்படியிருக்க, வலைப்பதிவு செய்யும் வசதி அளிப்பதற்கான புதுப்புது சேவைகள் அறிமுகமாகி கொண்டிருப்பதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதைவிட பொறாமையாக இருக்கிறது.
இப்போது அண்மையில் அறிமுகமாகியிருக்கும் வலைப்பதிவு சேவையான ரைட்பை.கோ (https://writeby.co/ ) பற்றி பார்க்காலம்.
எழுத்தாளர்களுக்கான வலைப்பதிவு மேடை எனும் டேக்லைனுடன் அறிமுகமாகியிருக்கும் ரைட்பை, மிக எளிதாக இதை செய்வதாக கூறுகிறது. எழுத்தாளர்கள், இதில் தங்களுக்கான வலைப்பதிவு கணக்கை துவக்கி எழுத துவங்கலாம். கவனச்சிதறல் இல்லாமல் எழுதலாம் என்பது இந்த மேடையின் சிறப்பம்சாக சொல்லப்பட்டுள்ளது. வாசகர்களை பொருத்தவரை மொபைல் திரையிலும் எளிதாக படிக்க ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வலைப்பதிவாளர்களை விட்டுவிடுங்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்களை பொருத்தவரை, கவனச்சிதறல் இல்லாமல் எழுதும் வசதி தேவை. அதாவது, டைப் செய்யும் போது, அந்த மென்பொருளில் உள்ள கூடுதல் அசம்ங்கள் எல்லாம் இடைஞ்சலாக இல்லாமல், எழுதுவதற்கான அம்சங்கள் மட்டுமே இருந்தால் போதுமானது.
இதே போன்ற வசதியை சாத்தியமாக்குவதாக ரைட்பை சொல்கிறது.
வலைப்பதிவு உலகம், பிளாகர், வேர்ட்பிரஸ் போன்றவற்றை எல்லாம் கடந்து மீடியம் காலத்திற்கு வந்துவிட்டது. தொழில்முறையாக எழுத விரும்புகிறவர்கள் பெரும்பாலும் மீடியம் (Medium) வலைப்பதிவு சேவையை தான் பயன்படுத்துகின்றனர்.
எழுத்து மேடையாக மீடியம் அளிக்கும் வசதி மற்றும் அதன் பின் உள்ளே வாசகர் பரப்பு அதை மிகவும் பிரபலமாக்கியிருக்கிறது. ஆனால், மீடியம் மேடையில் உள்ள குறைகளை, குறிப்பாக அதன் கட்டணச்சுவர் தடையை களைவதற்காக உருவாக்கப்பட்டுள்ள வலைப்பதிவு சேவை என்று ரைட்பை தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
இப்போது தான் அறிமுகமாகியிருக்கிறது. எப்படி வரவேற்பு பெறுகிறது என பார்க்கலாம்.