இணைந்து எழுதுவோம் வாருங்கள்!
புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’ரைட்டிங்.சோஷியல்’ தளத்தை மிகவும் அற்புதமான தளம் என்றோ அல்லது புதுமையான தளம் என்றோ சொல்வதற்கில்லை. இந்த தளம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் சொல்வதற்கில்லை. ஆனால், இந்த தளம் சுவாரஸ்யமாக இருக்கிறது. இணைய உலகில் கவனத்தை ஈர்த்து வைரலாக பரவுவதற்கான ஆதார அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
இந்த தளத்தின் நோக்கமும் சரி, வடிவமைப்பும் சரி மிக எளிமையாக இருக்கிறது. உங்களை எழுத வைப்பது தான் இந்த தளத்தின் நோக்கம். இதை கூட்டாக இணைந்து செய்வோம் வாருங்கள் என அழைப்பு விடுக்கும் வகையில் இந்த உள்ளடக்கம் அமைந்துள்ளது.
இந்த தளத்தில் நுழைந்ததும், இந்த வாரத்திற்கான கதையின் முதல் வரி கொடுக்கப்பட்டிருக்கும். அதை தூண்டுதலாக கொண்டு உங்கள் பங்கிற்கு அந்த கதையை எழுதி சமர்பிக்க வேண்டும்.
இப்படி வாரம் ஒரு கதைக்கான தூண்டுதல் அளிக்கப்பட்டு, பயனாளிகள் அது தொடர்பாக தங்கள் பக்கத்தை எழுதி சமர்பிக்க வேண்டும். இவற்றுக்கு கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில் வாரம் ஒரு சிறந்த பக்கம் தேர்வு செய்யப்பட்டு, கதை புத்தகத்தில் சேர்க்கப்படும்.
இப்படி கூட்டாக பயனாளிகள் சேர்ந்து எழுதும் பக்கங்களை கொண்டு ஒரு முழு புத்தகம் உருவாக்கப்படும் என இந்த தளம் தெரிவிக்கிறது.
எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் எழுதும் பழக்கத்தை உண்டாக்குவதே நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரும் இணைந்து கதை எழுத வழி செய்யும் பாணி இணையதளங்கள் இதற்கு முன் தோன்றாமல் இல்லை. அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கிறது இந்த தளம்.
இணைந்து எழுதுவதன் மூலம் தினமும் எழுதும் பழக்கத்தை ஊக்குவிப்பதால் இந்த தளத்தை ஆதரிக்கலாம்.
இணையதள முகவரி: https://writing.social/book/something-in-the-mist