உங்களை அறிய ஒரு இணையதளம்
’சுமைதாங்கி’ படத்தில் வரும் ’மயக்கமா கலக்கமா’ … பாட்டில், வரும் ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு” எனும் கவியரசு கண்ணதாசன் வரிகளை தன் வாழ்க்கைப்பாதையை மாற்றிய வரிகளாக கவிஞர் வாலி குறிப்பிட்டிருக்கிறார்.
திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்காத வேதனையில் தற்கொலை மனநிலையில் இருந்த தன்னை இந்த பாடல் தான் மீட்டதாக வாலி கூறியிருந்ததாக நினைவு.
நம்மை விட மேம்பட்டு இருப்பவர்களை பார்த்து புலம்புவதை விட, நம்மைவிட மோசமான நிலையில் இருப்பவர்கள் நினைத்து பார்ப்பது சிறந்தது எனும் கண்ணதாசனின் இந்த கருத்தை நினைவுப்படுத்தும் வகையில், சுவாரஸ்யமான இணையதளம் ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது.
தேன் ஆவ்ரேஜ் (https://thanaverage.xyz/ ) எனும் அந்த இணையதளம், ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்ள வழி செய்கிறது. இதை மிகவும் சுவாரஸ்யமான முறையிலும் செய்கிறது.
ஒரு அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட அறிமுகம் இல்லாதவர்களுடன் இருக்கிறீர்கள் என நினைத்துக்கொண்டு, அதில் உள்ளவர்கள் எல்லாம் உங்கள் சகாக்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என நினைத்தபடி, உண்மையாக பதில் சொல்லுங்கள் எனும் அறிமுகத்துடன், இந்த தளம் வரிசையாக பல கேள்விகளை கேட்கிறது.
எல்லாமே எளிமையான கேள்விகள் தான். சராசரியை விட உங்களுக்கு நண்பர்கள் அதிகமா?, சராசரியை விட உங்களுக்கு துணிச்சல் அதிகமா?, சராசரியை விட நீங்கள் நம்பிக்கை மிக்கவரா? என்பது போல கேள்விகள் அமைகின்றன.
இந்த கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என பதில் அளிக்கலாம். இதனையடுத்து பதில் அளித்தவர்களில், உங்களைப்போல உணர்பவர்கள் எத்தனை சதவீதம் என தெரிவிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, நம்பிக்கை மிக்கவர் என பதில் அளித்திருந்தால், 70 சதவீதம் பேர் தங்களை நம்பிக்கையானவர் என உணர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே போல ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து, சராசரி மக்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாம். புதியவர்கள் பங்கேற்பிற்கு ஏற்ப, ஒப்பீடு மாறிக்கொண்டே இருக்கும் என்பது சுவாரஸ்யம்.
மற்றவர்களுடன் ஒப்பிடும் போது நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டுள்ள தளம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எந்த அறிவியல்பூர்வம் அடிப்படையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விகளையும், அதற்கு பொதுவாக அளிக்கப்பட்ட பதில்கள் சதவீதத்தையும் பார்க்கும் வசதி இருக்கிறது. சுவாரஸ்யமான இந்த தளம் பங்கேற்பாளர்களை சுய பரிசீலைனையில் ஈடபட வைக்கும் திறன் கொண்டிருக்கிறது.