நெல்லை மாவட்ட கொரோனா பாதுகாப்பு இணையதளம்
பேரிடர் காலம் போலவே கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு முக்கியமாக தேவைப்படும் விஷயங்களில் ஒன்று தகவல்கள்.
சரியான தகவல்களை, சரியான நேரத்தில் மக்களுக்கு அளிப்பது அரசின் கடமை.
நெல்லை மாவட்டம் சார்பில் கொரோனா பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கோவிட்கேர்திருநெல்வேலி
(https://covidcaretirunelveli.in/ ) தளத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். மிக எளிமையாக, ஒரு பக்க தளமாக அமைக்கப்பட்டுள்ள இந்த தளம், கொரோனா சூழலில் மிகவும் தேவையான தகவல்களை அளிக்கிறது.
அடிப்படையில் இந்த தளத்தின் நோக்கம், கொரோனா இரண்டாம் அலை சூழலில், நெல்லை மாவட்ட மக்களுக்கு, கொரோனா பரிசோதனை மையங்கள், சிகிச்சை மையங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் தொடர்பான தகவல்களை அளிப்பது தான். இதை இந்த தளம் மிகச்சிறப்பாக செய்கிறது.
சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம் எனும் கருத்தை வலியுறுத்தும் இந்த தளம், தடுப்பூசி மையங்கள், காய்ச்சல் கண்டறியும் மையங்கள் தொடர்பான தகவல்களை முதன்மையாக வழங்குகிறது. இந்த தகவல்களை மாவட்ட வரைபடத்தின் மீது எளிதாக கண்டறிய வழி செய்வதோடு, தொலைபேசி வாயிலாகா ஆலோசனை பெறவும் வழி காட்டுகிறது.
இவைத்தவிர, கொரோனா தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான நெறிமுறைகள், காய்ச்சல் அறிகுறிகள், கைகழுவும் முறைகள் ஆகியவை தொடர்பாகவும் எளிதாக விளக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிமுறைகள் தொடர்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இதே போன்ற இணையதளம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு வேண்டும் என்பதோடு, மொத்த மாநிலத்திற்கும் இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளம் இருந்தால் நல்லது.
தமிழகத்தில் மருத்துவமனைகளில் படுக்கை நிலவரம் தொடர்பான தகவல்களை அளிப்பதற்காக https://twitter.com/104_gotn எனும் டிவிட்டர் பக்கமும் அமைக்கப்பட்டுளது.